மணல் அரிப்பால் விரிசல் கொள்ளிடம் இரும்பு பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம்


மணல் அரிப்பால் விரிசல் கொள்ளிடம் இரும்பு பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம்
x
தினத்தந்தி 17 Aug 2018 10:30 PM GMT (Updated: 17 Aug 2018 10:06 PM GMT)

மணல் அரிப்பால் விரிசல் ஏற்பட்டுள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

திருச்சி,

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தின் 6-வது தூணில் மணல் அரிப்பால் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த தூண் ஆற்றுக்குள் 2 அடி இறங்கியது. தொடர்ந்து அந்த தூண் மண்ணில் புதைந்து வருவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

காவிரி பாலம் தூணில் விரிசல்

திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு காவிரி புதுப்பாலம் என்று பெயர்.

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் இருந்து திருச்சிக்கு வரும் பாதையில் இந்த பாலத்தின் இடது பக்கம் உள்ள முதல் தூணில் சிறிய அளவிலான விரிசல் திடீரென்று ஏற்பட்டு இருப்பது நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள்

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காவிரி பாலத்தை தாங்கி நிற்கும் முதல் தூணில் உள்ள சிறிய அளவிலான விரிசல் இப்போது உள்ள வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டது அல்ல. இந்த விரிசல் சில மாதங்களுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டு, அதனை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பாலத்திற்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை’ என்றனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில், ‘காவிரி பாலத்தின் முதல் தூணில் மிக சிறிய அளவில்தான் ஒரு கோடு போல் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாலத்திற்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினாலும் பாதிப்பு ஏற்படாது’ என்றார்.

பொதுமக்கள் அச்சம்

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மிகவும் பழமையான இரும்பு பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் அது இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால் காவிரி பாலத்திலும் அதுபோன்ற நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Next Story