ஆகஸ்ட் மாதம் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் கருணாநிதி
கடந்த 14 ஆண்டுகளில் 'கருணாநிதி' என்ற வார்த்தை தான், இணையத்தில் அதிக அளவில் தேடப்பட்டுள்ளது.
2018 ஆகஸ்ட் மாதத்தில் தான், கருணாநிதி என்ற பதம், அதிகளவில் தேடப்பட்டதாக கூகுளின் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதிலும், அவர் மறைந்த ஆகஸ்ட் 7ம் தேதி தான் அவர் பற்றிய தேடல்கள் உச்சத்தை தொட்டுள்ளன.
இந்த தேடல்களை கொஞ்சம் உற்று நோக்கினால், கருணாநிதியின் உடல்நிலை மற்றும் மரணம் பற்றிய செய்திகளை அறிவதே பெரும்பாலான மக்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது. அடுத்தபடியாக, அவரது குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள ஏராளமானோர் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக, ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், கருணாநிதி நினைவிட சர்ச்சை பற்றியும் மெரினா வழக்கு பற்றியும் கூகுளிடம் கேட்டவர்கள் அதிகம்.
உலக அளவில், இந்தியாவில் மட்டுமே அவரை பற்றிய தேடல் அதிகமாக இருந்துள்ளது. இந்தியாவில் 90 சதவிகித தேடல்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் என்பது எதிர்பார்த்த ஒன்றே. இதற்கு முன் கருணாநிதி பற்றி மக்கள் அதிகம் கூகுளில் தேடியது எப்போது? என்று பார்த்தால், அவர் காவேரி மருத்துமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2016ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஆகும். மற்றொன்று, அதற்கு 10 நாட்கள் முன்பு, ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட டிசம்பர் 6 ஆம் தேதி ஆகும்.
இதே ஆகஸ்டில் மரணம் அடைந்த மற்றொரு தலைவரான வாஜ்பாய் பற்றிய தேடல்களும் உச்சத்தை தொட்டது இந்த மாதத்தில் தான். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தியா முழுவதும் வாஜ்பாய் பற்றிய ஆர்வமே அதிகம் இருந்தாலும் - தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாஜ்பாயை தாண்டி, கருணாநிதியை தேடியவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story