மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம் பாரம்பரியமுறையில் நடத்திய திருமணத்தில் ருசிகரம்


மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம் பாரம்பரியமுறையில் நடத்திய திருமணத்தில் ருசிகரம்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:15 PM GMT (Updated: 12 Sep 2018 8:28 PM GMT)

கோபி அருகே மாட்டுவண்டியில் மணமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

கடத்தூர்,

கோபி அருகே மாட்டுவண்டியில் மணமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

பாரம்பரிய முறையில் நடந்த இந்த ருசிகர திருமணம் பற்றிய விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணபவன். இவருடைய மகன் கவிஅரவிந்த் (வயது 29). என்ஜினீயரிங் முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இவருக்கும், கோபி அருகே உள்ள எரங்காட்டூரைச் சேர்ந்த செல்வகுமாரின் மகள் எம்.எஸ்.சி. பட்டதாரியான பிரவீணாவுக்கும் (25) திருமணம் கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நேற்று காலை நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டனர். நாட்டுக்காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் திருமண ஜோடி ஏறி அமர்ந்து சென்றனர். மேலும் அவர்களுடன் வந்த உறவினர்களும் 5-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணமக்கள் சென்ற வண்டிக்கு பின்னால் சென்றனர்.

அந்தியூர்-கோபி சாலையில் மாட்டு வண்டியில் இருந்து திருமண ஜோடி இறங்கியது. பின்னர் கவிஅரவிந்தும், பிரவீணாவும் அங்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த குதிரை வண்டியில் ஏறி அமர்ந்து சென்றனர். திருமணத்துக்கு வந்த உறவினர்கள் அனைவரும் மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டியில் வரிசையாக சென்றதை அவ்வழியே வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், ‘தற்போது நடைபெறக்கூடிய திருமணங்கள் பழைய மரபுகளையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மறந்து நடைபெற்று வருகின்றன. இவைகள் அனைத்தும் இளைய தலைமுறையினருக்கு தெரியவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் திருமணம் முடிந்த பின்னர் கோவிலில் இருந்து மாட்டு வண்டியில் வந்தோம். இது எங்களுக்கு பழைய பாரம்பரியத்தை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. தற்போது நாகரிகம் வளர்ந்து வரும் நிலையில், படித்த பெண்கள் விவசாயம் செய்பவர்களை திருமணம் செய்துகொள்ள முன்வருவதில்லை என்ற நிலை உள்ளது. படித்த பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ள முன்வரவேண்டும்.

இதேபோல் நாட்டு மாடு, ஜெர்சிமாடு எது என்பது கூட ஒருசிலருக்கு தெரிவதில்லை. அதனை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் திருமணம் முடிந்து மாட்டு வண்டியில் பயணம் செய்தோம்’ என்றனர்.

சொகுசு வாகனங்களில் மணமக்கள் மாலையும், கழுத்துமாக செல்லும் இந்த காலத்தில் பாரம்பரிய முறையில் மாட்டுவண்டியில் மணமகன், மணமகள் பயணம் செய்த இந்த சம்பவம் கோபி பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Next Story