ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட 5 வகை நோய்களில் இருந்து தப்பிக்க வழி அப்பல்லோ டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தகவல்


ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட 5 வகை நோய்களில் இருந்து தப்பிக்க வழி அப்பல்லோ டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தகவல்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:15 PM GMT (Updated: 18 Sep 2018 9:09 PM GMT)

இருதய நோய், சர்க்கரை, பக்கவாதம், ரத்தக்கொதிப்பு மற்றும் புற்றுநோய் ஆகிய 5 வகை நோய்களில் இருந்து தப்பிக்க முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று அப்பல்லோ டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.

சென்னை,

சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை தொடங்கி 35 ஆண்டுகள் நிறைவு விழா மருத்துவமனையில் நேற்று நடந்தது. மருத்துவ குழுமத்தின் செயல் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தலைமை தாங்கினார். 35 ஆண்டுகள் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள 30 டாக்டர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறியதாவது:-

அப்பல்லோ மருத்துவமனையை 1983-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங் தொடங்கி வைத்தார். தற்போது 9 ஆயிரத்து 215 படுக்கைகளுடன் 90 சிகிச்சை மையங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்களும், 2 ஆயிரத்து 500 மருந்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது. 56 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் உள்பட 6 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர 110-க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும், 80-க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் கிளைகளும் நாடு முழுவதும் உள்ளன.

மருத்துவமனையில் குழந்தைகள் உள்பட 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. 12 ஆயிரத்து 500 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் நடந்து உள்ளது. 5 லட்சம் வெளிநாட்டு நோயாளிகளுக்கும் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். 1.60 கோடி பேருக்கு நோய் தடுப்பு மருத்துவ சோதனை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தியர்கள் யாரும் உயர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உருவாகக் கூடாது என்ற என்னுடைய நோக்கம் இப்போது நிறைவேறி உள்ளது. அதுவும் வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெறும் செலவில் பத்தில் ஒரு மடங்கு தான் இங்கு இப்போது செலவாகிறது.

நாட்டில் தனியார் மருத்துவ துறையின் பங்களிப்பு 74 சதவீதமாக உள்ளது. அத்துடன் இந்த துறை 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாகவும் வளரும். இந்தியாவிலேயே மருத்துவ துறை வளர்ந்து வருவதால் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய செல்லும் டாக்டர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 85 சதவீத அளவுக்கு குறைந்துவிட்டது.

தொலை தூர மருத்துவ சேவையில் முன்னோடியாக இருப்பதுடன், மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பவன்’ திட்டத்தை செயல்படுத்துவதிலும் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் ஸ்டெம் செல், மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகளிலும் ஈடுபட்டு உள்ளோம்.

இதேபோல் புற்றுநோயை குணப்படுத்த 1,000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் நவம்பர் மாதம் ‘புரோடான் தெரபி’ என்ற மருத்துவமனையை திறக்க இருக்கிறோம்.

வரும் காலங்களில் பெரிதாக உருவெடுக்க இருக்கும் இருதய நோய், சர்க்கரை, பக்கவாதம், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் ஆகிய 5 வகை நோய்களில் இருந்து தப்பிக்க முன்கூட்டியே பரிசோதனை செய்து வருமுன் காப்பது சிறந்தது. இதற்காகவும் தனி மையத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு 4 நாட்களில் மருத்துவ குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. மருத்துவமனையின் சேவையை பாராட்டி அரிதான வகையில் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story