பூட்டிய வீட்டுக்குள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை பிணமாக மீட்பு


பூட்டிய வீட்டுக்குள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 3 Oct 2018 10:00 PM GMT (Updated: 3 Oct 2018 7:22 PM GMT)

சென்னை திருவான்மியூரில் பூட்டிய வீட்டுக்குள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

அடையாறு,

சென்னை திருவான்மியூர் இந்திரா நகர் 4-வது அவென்யூவில் வசித்து வந்தவர் மீராஆஷா மேனன் (வயது 56). இவர், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை ஆவார். திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை.

இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், தனிமையில் வாழ்ந்து வந்த மீராஆஷா மேனன் கடந்த 4 வருடமாக பேராசிரியை பணிக்கும் செல்லாமல், யாருடனும் பேசாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பூட்டிக்கிடந்த அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. இதையடுத்து போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு பேராசிரியை மீராஆஷா மேனன், உடல் அழுகிய நிலையில் படுக்கையில் படுத்த நிலையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை கவனிக்க யாரும் உடன் இல்லாததால் உடல்நல குறைவால் அவர் இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மீராஆஷா மேனனுக்கு உறவினர் யாரும் இல்லாததால், பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை கதீட்ரல் தேவாலய நிர்வாகிகள் பெற்றுச்சென்றனர்.

Next Story