அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை -வானிலை மையம்


அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை -வானிலை மையம்
x
தினத்தந்தி 3 Nov 2018 8:59 AM GMT (Updated: 3 Nov 2018 8:59 AM GMT)

அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்  நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழையோ மிக கனமழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story