‘தேவேந்திரர் மகன்’ என்று படத்துக்கு பெயரிட்டால் நல்ல முறையில் ஓடும் கமல்ஹாசனுக்கு, டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம்


‘தேவேந்திரர் மகன்’ என்று படத்துக்கு பெயரிட்டால் நல்ல முறையில் ஓடும் கமல்ஹாசனுக்கு, டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 7:26 PM GMT)

‘தேவேந்திரர் மகன்’ என்று படத்துக்கு பெயரிட்டால் நல்ல முறையில் ஓடும் என்று கமல்ஹாசனுக்கு, டாக்டர் கிருஷ்ணசாமி அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

சென்னை,

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தந்தி தொலைக்காட்சியில் பாண்டே உடனான உங்களுடைய பேட்டியை நேற்றுதான் (நேற்று முன்தினம்) பார்க்க முடிந்தது. இதில் நீங்கள் ‘---மகன்-2’ என்ற பெயரில் படம் எடுப்பதாக கூறியிருந்தீர்கள். 1993-ல் எந்த பெயரில் எடுக்கப்பட்ட படத்தால் சாதிக்கலவரம் உருவாக்கப்பட்டதோ, அதே பெயரில் இப்போது படம் எடுப்பதாக கூறுகிறீர்கள். அந்த படத்தால் விதைக்கப்பட்ட சாதிய விதையால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரையிலும் சாதிப்போர் நடந்துகொண்டே இருக்கிறது.

உங்களுடைய படத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். பெயர் மட்டுமே முக்கியம் உள்ளே என்ன சொல் கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. ‘தேவேந்திரர் மகன்’ என்று தங்களுடைய படத்துக்கு பெயரிடுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பையும், கவுரவத்தையும் பெற்றுத்தரும். அந்த படமும் நல்ல முறையில் ஓடும்.

ஒருவேளை நீங்கள் கூறியது போன்று படத்துக்கு பெயரிடுவதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த தேவேந்திரகுல மக்கள் முன்பு சண்டியருக்கு கொடுத்த எதிர்ப்புகளை காட்டிலும் மிக, மிக கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய சூழல்கள் உருவாகும். முதல் திரைப்படத்துக்கு சமநிலையை உருவாக்கும் வகையில் தற்போது எடுக்கக் கூடிய படத்துக்கு ‘தேவேந்திரர் மகன்’ என்று பெயர் சூட்டினால் நீங்கள் உண்மையிலேயே மையத்தை விரும்பக்கூடியவராக அனைவராலும் கருதப்படுவீர்கள்.

உங்களது கொள்கைப்படி மைய அரசியலை கையாள வேண்டுமென்றால், மறைக்கப்பட்ட அடையாளத்தை மீட்க போராடும் தேவேந்திரகுல வேளாளர்களை அடையாளப்படுத்தி ‘தேவேந்திரர் மகன்’ என்ற பெயரில் படம் எடுங்கள். அது ஓடும். ஆனால் நீங்கள் கூறியது போன்று பெயர் வைத்து படம் எடுத்தால் ஓடாது. மாறாக முடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story