சி.பி.எஸ்.இ. பாடத்தை திருத்தம் செய்ய கோரிய விவகாரம் தமிழிசை சவுந்தரராஜனுடன் நாடார் சங்க நிர்வாகிகள் சந்திப்பு


சி.பி.எஸ்.இ. பாடத்தை திருத்தம் செய்ய கோரிய விவகாரம் தமிழிசை சவுந்தரராஜனுடன் நாடார் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 9:45 PM GMT (Updated: 8 Nov 2018 8:59 PM GMT)

சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடத்தை திருத்தம் செய்வது குறித்து கோரிக்கை விடுத்தது தொடர்பாக பா.ஜனதா மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுடன் நாடார் சங்க நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள்.

சென்னை,

தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்பிரிவில் நாடார் சமுதாயத்தை பற்றிய பாடங்கள் குறித்து, தமிழகத்தில் அதிருப்தி ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இந்த பாடத்திட்டங்களை திருத்தம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆனால் எந்த திருத்தமும் செய்ய முன்வரவில்லை. கடந்த ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடார் சங்க நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்தார்கள்.

நான் நிர்வாகிகளை டெல்லி அழைத்து சென்று மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை நேரில் சந்தித்து கோரிக்கையை எடுத்துரைத்தேன். அதன்பின்னர் அந்த பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகள் நீக்கப்பட்டன.

போராட்டம் தேவையா?

இதற்கென நாடார் சங்க நிர்வாகிகள் பா.ஜ.க.வுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர். இப்போது மீதமுள்ள சில பகுதிகளையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த வாரம் டெல்லி சென்று, இந்த கோரிக்கையை தெரிவித்து வந்துள்ளேன். கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சில நிர்வாகிகள் இந்த பிரச்சினை குறித்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிந்தேன். தேவைப்படுகிற நடவடிக்கைகளை எடுத்து நாடார் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குரிய முயற்சிகளை எடுக்க தயாராக இருக்கிறோம் என்ற நிலையில் போராட்டம் தேவையா? என்பதை நிர்வாகிகள் தான் சிந்திக்க வேண்டும். இதுகுறித்து நேரில் சந்தித்த சங்கத்தலைவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வோம்.

நிர்வாகிகள்

அகில இந்திய நாடார் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை நாடார் சங்கத் தலைவர் எஸ்.முத்துப்பாண்டியன், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் மயிலை பி.சந்திரசேகர், தமிழ்நாடு வணிக சங்கத் தலைவர் முத்துகுமார், மயிலை நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.வெள்ளத்துரை, இந்து நாடார் சங்கச் செயலாளர் ஏ.பி.பெரியசாமி, வெட்டுவாங்கேணி நாடார் சங்கத் தலைவர் வி.ஆனந்த செல்வன், கிருகம்பாக்கம் நாடார் சங்க பொதுச் செயலாளர் ஆர்.பாலமுருகன், நெல்லை - தூத்துக்குடி நாடார் சங்க மீட்பு குழுச் செயலாளர் ஆறுமுகபாண்டியன், அமைந்தகரை நாடார் சங்க செயலாளர் ஆதித்யராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என்னை கமலாலயத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

பா.ஜ.க. மாநில செயலாளர் கரு.நாகராஜன், கோட்ட இணை பொறுப்பாளர் காளிதாஸ், ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story