‘மோடி அலை ஓய்ந்து, ராகுல் காந்தி அலை வீசுகிறது’ திருநாவுக்கரசர் பேட்டி


‘மோடி அலை ஓய்ந்து, ராகுல் காந்தி அலை வீசுகிறது’ திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 9:29 PM GMT)

மோடி அலை ஓய்ந்து, ராகுல் காந்தி அலை வீசுகிறது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

சென்னை, 

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கருப்பு தினமாக அனுசரித்தும், மக்கள் விரோத செயல்படுவதாக கூறி மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்லபிரசாத் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மோடி பதவியேற்ற பின் நடந்த 17 நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், 3 இடங்களில் தான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள்தான் வெற்றி பெற்றுள்ளன.

பா.ஜ.க. வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மோடி அலை ஓய்ந்துவிட்டது. தற்போது நாடு முழுவதும் ராகுல்காந்தி அலை வீசி வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் மோடி அரசு செய்த சீர்குலைவுகளை சீர்திருத்தம் செய்யும்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். மோடிக்கு எதிராக வலுவான அணி அமைப்பது குறித்து, ராகுல்காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் அனைத்து கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசி வருவது, காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும். எங்களை பொறுத்தவரை ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.

‘சர்கார்’ படம் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் தான் திரையிடப்பட்டுள்ளது. எனவே ஆளும் கட்சியினர் பேனரை கிழிப்பதோ, தியேட்டர்களில் ரகளை செய்வதோ, குறிப்பிட்ட காட்சிகளை நீக்கவேண்டும் என்று வலியுறுத்துவதோ தவறு. தணிக்கை குழுவிடம் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கவேண்டும் என்பதற்காக அணுகலாம். இல்லை என்றால் கோர்ட்டை அணுகலாம். அ.தி.மு.க.வினர் சட்டப்பூர்வமாக அணுகவேண்டுமே தவிர, ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆருன், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், நடிகர் கே.ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story