பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:28 PM GMT (Updated: 10 Nov 2018 10:28 PM GMT)

கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக சந்தையில் கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் 60.13 டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

வழக்கமாக பெட்ரோல் விலையும், டீசல் விலையும் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன? என்பது குறித்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடும். ஆனால், அக்டோபர் 29-ந்தேதிக்குப் பிறகு இந்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடவில்லை. அந்த விவரங்களை வெளியிட்டால் உண்மை நிலை அம்பலமாகிவிடும் என்பதால் தான் அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடாமல் ரகசியமாக வைத்து பாதுகாத்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன்களை மக்களுக்கு வழங்காததால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதைப் போலவே ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கூடுதலாக லாபம் கிடைக்கிறது. இதனால் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் கோடியை சட்டவிரோத லாபமாக குவித்து வருகின்றன.

2014-2016-ம் ஆண்டு காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது அதன் பயன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொண்டது. இப்போது கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன் களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்திருக்கிறது. இதைவிட பெரிய சுரண்டல் இருக்க முடியாது.

மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story