ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் புதிய வடிவம் எடுக்கும் வைகோ பேட்டி


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் புதிய வடிவம் எடுக்கும் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 8:24 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் புதிய புதிய வடிவம் எடுக்கும் என்று வைகோ கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அ.தி.மு.க. அரசுதான் காரணம்

ஸ்டெர்லைட் வழக்கு தற்போது அரசுக்கு விரோதமாக போய்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தான் காரணம்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையை மூட தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. இதனால் போராட்டம் நிற்காது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டம் புதிய புதிய வடிவம் எடுக்கும். ஆலை அகற்றப்படும் வரை போராட்டம் நடக்கும். ஆனால் வன்முறை இருக்காது. நாங்கள் வன்முறையில் இறங்க மாட்டோம்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் இந்த 20 தொகுதிகளிலும் யார் போட்டியிடுவது என்று தி.மு.க. தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story