ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு உத்தரவிடவில்லை- தூத்துக்குடி கலெக்டர்


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு உத்தரவிடவில்லை- தூத்துக்குடி கலெக்டர்
x

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு உத்தரவிடவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன. அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை.

மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதி காக்க வேண்டும்.

எந்தவித போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய தேவை இல்லை. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக ஆலை திறக்கப் போகிறார்கள் என்று கூறுவது தவறான தகவல். நாளைக்கே ஆலையை திறக்க எந்த உத்தரவும் இல்லை. ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த உத்தரவுக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story