மத்திய,மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தொடக்க புள்ளிதான் இந்த ஊராட்சிசபை கூட்டம் -மு.க.ஸ்டாலின்


மத்திய,மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தொடக்க புள்ளிதான் இந்த ஊராட்சிசபை கூட்டம் -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Jan 2019 7:44 AM GMT (Updated: 10 Jan 2019 8:50 AM GMT)

மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தொடக்க புள்ளிதான் இந்த ஊராட்சிசபை கூட்டம் என மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கங்களுடன் ஊராட்சிசபை கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கிவைத்து திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார். நேற்று மாலை தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார்.

இதையடுத்து இரவு திருச்சி வந்த மு.க.ஸ்டாலின் சங்கம் ஓட்டலில் தங்கினார். இன்று காலை காரில் புறப்பட்ட அவர் மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தொடக்க புள்ளிதான் இந்த ஊராட்சி சபை கூட்டம்.உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு மறுக்கிறது . உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் தான் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

திமுகவின் செல்வாக்கு உயர்ந்து விடும் என்ற எண்ணத்தில்தான், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தயங்குகிறது.

உங்கள் பிரச்சனைகளை தெரிவியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றுவோம். உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் இதுபோன்ற நிலை இருந்திருக்காது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. உள்ளாட்சி தேர்லை நடத்தி இருந்தால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் உங்கள் பிரச்சனைகளை தீர்த்திருக்கலாம்.

தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமங்களுக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி பணிகளை செய்தோம். மற்ற துறைகளின் மூலமும் நிதி ஒதுக்கி ரூ.1 கோடி வரையில் பணிகளை செய்துள்ளோம். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெற்று செல்வாக்கு பெற்றுவிடும் என்பதால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் வேண்டுமென்றே வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.

உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் இந்த ஊராட்சி சபை கூட்டம் என கூறினார்.

Next Story