ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்- மு.க.ஸ்டாலின்


ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்- மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 14 Jan 2019 12:31 PM GMT (Updated: 14 Jan 2019 12:31 PM GMT)

ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என ஆளுனர் சந்திப்புக்கு பின் தி.மு.க தலைவர் மு.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

சென்னை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. 

இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்கள்.

மேலும் கொடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இந்த நிலையில்,  கொடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அவருடன் டி.ஆர். பாலு,  கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் உடன் சென்றனர்.

கொடநாடு விவகாரம் தொடர்பாக கவர்னரிடம் நேரில் முறையிட்டார்.  கொடநாடு  கொலை கொள்ளை வீடியோ விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக்கோரி மனு அளித்து உள்ளார்.

கவர்னருடனான சந்திப்புக்கு பின்  மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டுமென்றால் முதல்வர் பழனிசாமியை உடனடியாக பதவி விலக்க வேண்டும் என கூறினார்.

Next Story