பாலமேடு ஜல்லிக்கட்டு எந்த அசம்பாவிதங்களும் இன்றி சிறப்புடன் நடந்து முடிந்தது; மதுரை ஆட்சியர் பேட்டி


பாலமேடு ஜல்லிக்கட்டு எந்த அசம்பாவிதங்களும் இன்றி சிறப்புடன் நடந்து முடிந்தது; மதுரை ஆட்சியர் பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2019 4:29 PM GMT (Updated: 16 Jan 2019 4:29 PM GMT)

பாலமேடு ஜல்லிக்கட்டு எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது என மதுரை ஆட்சியர் நடராஜன் கூறியுள்ளார்.

மதுரை,

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது.  ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், 2வது நாளாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது.  இதனை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  போட்டியில் 988 காளைகளும், 846 வீரர்களும் பங்கேற்றனர்.  1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இதன்படி, போட்டியில் 10 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.  இதேபோன்று சிறந்த காளைக்கான முதல் பரிசாக மேலூர் மலம்பட்டியை சேர்ந்த உரிமையாளர் பிரபுவுக்கு கார் வழங்கப்பட்டது.

இந்த போட்டி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆட்சியர் நடராஜன், பாலமேடு ஜல்லிக்கட்டு எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.  அனைத்து துறையினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தனர் என கூறியுள்ளார்.

Next Story