ஆசியாவிலேயே பெரியதாக அமைகிறது தலைவாசலில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


ஆசியாவிலேயே பெரியதாக அமைகிறது தலைவாசலில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 7:57 PM GMT)

ஆசியாவிலேயே பெரியதாக சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா நிறுவப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை, 

ஆசியாவிலேயே பெரியதாக சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா நிறுவப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி எண் 110–ன் கீழ் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விலையில்லா கறவை மாடுகள்

தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சி தொடர விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை ஏற்றமடையச் செய்ய விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தையும் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தினார். அ.தி.மு.க. அரசு, இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன், நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் வண்ணம், ‘‘அசீல்’’ இனக் கோழிகளை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வேளாண் தொழிலின் உப தொழிலான கால்நடைத் தொழிலை மேன்மைப்படுத்தி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டித்தரும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறையின் உள்கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் மேம்படுத்த போதுமான நிதி ஆதாரங்களை அ.தி.மு.க. அரசு அளித்து வருகிறது.

நவீன கால்நடை பூங்கா

இதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்–79–ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் ரூ.396 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

3 பிரிவுகளாக அமையவுள்ள இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள், மற்றும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படும்.

இறைச்சி பதப்படுத்துதல்

இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றில் இருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்படும்.

3–வது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன பூங்கா தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களும் அங்கே வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகளுடன் இருக்கும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உறைவிந்து உற்பத்தி நிலையம்

‘‘மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பினக் காளைகளைக் கொண்டு ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்’’ என்று துணை முதல்–அமைச்சர் தனது 2019–2020–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்த உறைவிந்து உற்பத்தி நிலையம், இந்த வளாகத்திலேயே அமையப்பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகப்பெரிய அளவில் இப்பூங்கா அமைக்கப்படுவதால், இதனை நிர்வகிப்பதற்கு, தொடர்புடைய துறை இயக்குனர்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெயரால் அமைந்துள்ள மீன்வள பல்கலைக்கழகத்தின் பதிவாளர்கள் ஆகியோரை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக கொண்டு, ஒரு சங்கம் அமைக்கப்பட்டு, பதிவு செய்யப்படும்.

இத்திட்டத்தை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்திட கால்நடை பராமரிப்பு கூடுதல் இயக்குனர் பதவி உருவாக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தினசரி நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story