குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியையை கொன்ற வாலிபர் தற்கொலை


குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியையை கொன்ற வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Feb 2019 7:04 AM GMT (Updated: 24 Feb 2019 7:04 AM GMT)

குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியையை கொன்ற வாலிபர் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்தூர்பேட்டை,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பழைய ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா (வயது 22). ரம்யா குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறிஞ்சிப்பாடி பள்ளி வளாகத்தில் புகுந்து ஆசிரியை ரம்யாவை, ராஜசேகர் (வயது 23) என்பவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். ஒருதலைக்காதலால், இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர். 

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராஜசேகரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், மீனாலட்சுமி, டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ராஜசேகரின் சொந்த ஊரான விருத்தகிரி குப்பத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்புளான்குளம் முந்திரிகாட்டு பகுதிக்கு இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.உடனே அவர்கள் இதுகுறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய வாலிபர் பிணத்தை மீட்டனர். அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கிடந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் தூக்கில் தொங்கிய வாலிபர் யார் என்று விசாரித்தபோது அது குறிஞ்சிப்பாடியில் ஆசிரியை ரம்யாவை கொன்ற வாலிபர் ராஜசேகர் என்பது தெரியவந்தது. உடனடியாக திருநாவலூர் போலீசார் இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய ராஜசேகரின் உடலை மீட்டனர். மேலும் அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியை ரம்யாவை கொன்ற வாலிபர் தன்னை போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ஆசிரியையை  கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story