முதல்-அமைச்சர் தலைமையிலான குழு இறுதி செய்தது தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் பட்டியல் கவர்னர் முடிவை அறிவிப்பார்


முதல்-அமைச்சர் தலைமையிலான குழு இறுதி செய்தது தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் பட்டியல் கவர்னர் முடிவை அறிவிப்பார்
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 10:36 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு இறுதி செய்த, தமிழக லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர் பட்டியல் இன்று கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை, 

நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இதுவரை லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இந்த அமைப்பை ஏற்படுத்த காலதாமதமானதால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, கடந்த ஆண்டு ஜூலை 10-ந் தேதிக்குள் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். லோக் ஆயுக்தா தலைவர் ஐகோர்ட்டு நீதிபதியாகவோ, ஓய்வுபெற்ற நீதிபதியாகவோ, ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிர்வாகத்தில் விழிப்புணர்வில், நிதி மற்றும் சட்டத்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராகவோ இருக்க வேண்டும். மேலும் 2 நீதித்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

குழு அமைப்பு

தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவர்னரால் நியமிக்கப்படுவார்கள். அவர்களை, முதல்-அமைச்சரை தலைவராகவும், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழு பரிந்துரைக்க வேண்டும். தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான தேர்வு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கடந்த 2 மாதங்களாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்காக விண்ணப்பித்திருந்த 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து நேர்முகதேர்வு செய்தது. இதில் இறுதி செய்யப்பட்ட லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த 5-ந் தேதி முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் வழங்கினார்.

கவர்னர் அறிவிப்பார்

அதன் அடிப்படையில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய பட்டியல் இறுதி செய்வதற்கான கூட்டம் சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது.

சபாநாயகர் ப.தனபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் டாக்டர் எஸ்.ஸ்வர்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியல் இன்று (வியாழக்கிழமை) கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இந்த பரிந்துரையை ஏற்று நியமன ஆணையை கவர்னர் முறைப்படி விரைவில் அறிவிப்பார்.

Next Story