16 வயதுக்கு உட்பட்டவரே சிறுமி: போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பரிசீலனை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


16 வயதுக்கு உட்பட்டவரே சிறுமி: போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பரிசீலனை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 April 2019 10:15 PM GMT (Updated: 26 April 2019 7:57 PM GMT)

போக்சோ சட்டத்தில் 16 வயதுக்கு உட்பட்டவரே சிறுமி என்றும், அச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் கோர்ட்டு, அந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த வாலிபர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கை பொறுத்தவரை, வாலிபர் மீதான குற்றச்சாட்டை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. அதனால், கீழ்க்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, அந்த வாலிபரை விடுதலை செய்கிறேன்.

சிறை தண்டனை

போக்சோ சட்டப்பிரிவு 2(டி)யின்படி, 18 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமி என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியுடன், அவரது விருப்பத்துக்கு உட்பட்டு, உறவு கொண்டாலும், அவ்வாறு உறவு கொண்டது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் என்று கூறி அந்த ஆண் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

போக்சோ சட்டப்பிரிவின் கீழ் தண்டனை நிரூபிக்கப்படும்போது, குறைந்தது 7 அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. பொதுவாக 17 வயதில் பள்ளி இறுதி ஆண்டு படிப்போ அல்லது கல்லூரியில் முதல் ஆண்டு படிப்பிலோ அந்த சிறுமி இருப்பார். அதனால், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிக்கும், ஆணுக்கும் மத்தியில் நடந்த உடல் உறவை வரையறை செய்யவேண்டி உள்ளது.

வயதை குறைக்க வேண்டும்

18 வயதுக்கு உட்பட்ட சிறுமியுடன் காதல் திருமணம், உடல் ரீதியான உணர்வுகளினால், அந்த சிறுமியின் முழு சம்மதத்துடன் நடைபெறும் உறவு இயற்கைக்கு எதிரானது அல்ல. அப்பாவித்தனத்தாலும் அவை நடைபெறலாம். அவ்வாறு நடைபெறும் உறவுக்காக அந்த ஆண் தண்டிக்கப்படுகிறார். எனவே, போக்சோ சட்டப்பிரிவு 2(டி)ல் நிர்ணயிக்கப்பட்ட 18 வயது என்பதை 16 வயதாக குறைக்கவும், இதற்காக போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

அதேபோல சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இந்த குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்களையும் ஆராய மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story