ஐ.பி.எல். போட்டி; சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரியில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில்கள் இயக்கம்


ஐ.பி.எல். போட்டி; சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரியில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 7 May 2019 1:33 PM GMT (Updated: 7 May 2019 1:33 PM GMT)

ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரியில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. #IPLmatch

சென்னை,

12வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 23ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (12 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

இதில் 4வது இடத்திற்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாப்-2 இடங்களை பிடித்த 3 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் விளையாடுகின்றன.

ஐ.பி.எல். போட்டியை ஒட்டி சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரியில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.45 மணிக்கும், வேளச்சேரியிலிருந்து 11.25க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

Next Story