குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் வழங்கும் 50 பட்டங்கள் வேலைக்கு தகுதி வாய்ந்ததாக இல்லை அரசு தகவல்


குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் வழங்கும் 50 பட்டங்கள் வேலைக்கு தகுதி வாய்ந்ததாக இல்லை அரசு தகவல்
x
தினத்தந்தி 14 May 2019 7:56 PM GMT (Updated: 14 May 2019 7:56 PM GMT)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினர் செயலாளர் மற்றும் சமநிலைக்குழு நிர்வாகிகள் பங்கேற்ற 60-வது சமநிலைக்குழு கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினர் செயலாளர் மற்றும் சமநிலைக்குழு நிர்வாகிகள் பங்கேற்ற 60-வது சமநிலைக்குழு கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சில பட்டப்படிப்புகள் அரசு வேலை பெறுவதற்கு உரித்தான பட்டப்படிப்புகளுடன் சமமானதாக இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை அரசாணையாக பிறப்பிக்கும்படி வேண்டுகோள் விடுத்து தமிழக அரசுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைத்தது. இதனை பரிசீலித்து அந்த தீர்மானத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப்படிப்புகள், அரசு வேலைகளை பெறுவதில் சில பட்டப்படிப்புகளுக்கு சமமானது அல்ல என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

பெரியார் பல்கலைக்கழகம் அளிக்கும் பி.சி.ஏ. பட்டப்படிப்பு, அரசு வேலைகளை பெறுவதை பொறுத்தவரையில் பி.எஸ்.சி. கணித பட்டப்படிப்புக்கு நிகரானது அல்ல. இதேபோல பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் அளிக்கும் எம்.எஸ்.சி. அப்ளையிடு நுண்ணுயிரியல் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அளிக்கும் எம்.எஸ்.சி. நுண்ணுயிரியல் முதுகலை பட்டப்படிப்பு, எம்.எஸ்.சி. விலங்கியல் முதுகலை பட்டப்படிப்புக்கு நிகரானது அல்ல.

இதேபோன்று பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை அரசு வேலைவாய்ப்புகளில் சில படிப்புகளோடு சமமானதாக கருதமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story