பிரிவினையை தூண்டும் அரசியல் அமைப்புகள் கமல்ஹாசன் பேசியதை திரித்து வி‌ஷம பிரசாரம் - மக்கள் நீதி மய்யம் விளக்கம்


பிரிவினையை தூண்டும் அரசியல் அமைப்புகள் கமல்ஹாசன் பேசியதை திரித்து வி‌ஷம பிரசாரம் - மக்கள் நீதி மய்யம் விளக்கம்
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 3:51 PM GMT)

பிரிவினையை தூண்டும் அரசியல் அமைப்புகள் கமல்ஹாசன் பேசியதை திரித்து வி‌ஷம பிரசாரம் - மக்கள் நீதி மய்யம் விளக்கம்

சென்னை, 

பிரிவினையை தூண்டும் அரசியல் அமைப்புகள் கமல்ஹாசன் பேசியதை திரித்து வி‌ஷம பிரசாரம் செய்வதாக மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வி‌ஷம பிரசாரம் 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் அரவக்குறிச்சியில் பேசியதை பிரிவினையைத் தூண்டுகின்ற சில அரசியல் அமைப்புகள் முற்றிலுமாக திரித்தும் திசைமாற்றியும் வி‌ஷம பிரசாரம் செய்து வருகின்றனர். கமல்ஹாசனின் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து, அதன் மூலமாக தங்களின் பொய் பிரசாரத்துக்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில வி‌ஷமிகள் புரட்டுவாதத்தினை பரப்பி வருகின்றனர். பயங்கரவாதம் எந்த மதத்தினாலும் எந்த வடிவில் முன்னெடுக்கப்பட்டாலும் அது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்று தான் அவர் தெரிவித்திருந்தார். அவரது உரையில், ஒவ்வொரு குடிமகனும் ஒருங்கிணைந்தும், ஒன்றிணைந்தும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சமூகமாக இருந்திடவேண்டும் என்கின்ற தன்னுடைய எதிர்பார்ப்பினை அவர் வெளிப்படுத்தி பேசியுள்ளார்.

மக்களுக்கான அரசியலை... 

கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பேசிய முழு உரையினையும் ஊடகங்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக, ‘இந்தியர்’ என்ற ஒருமைப்பாட்டு உணர்வுடன் தொடர்ந்து வாழ்ந்திடவேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தோடு, மக்களின் பேராதரவோடு நடைபோட்டுக்கொண்டிருக்கின்ற மக்கள் நீதி மய்யம் கட்சி இக்கருத்தினை வலியுறுத்தி மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துக் கொண்டே இருக்கும். இந்த நிலைப்பாட்டினை உறுதி செய்திடும் வகையில் தொடர்ந்து தனது கருத்துக்களை வலியுறுத்திக்கொண்டே இருக்கும். மாட்சிமை பொருந்திய நீதிமன்றங்கள் மீதும் சட்டத்தின் மீதும் பெரும் மரியாதையும், மதிப்பும் எங்கள் கட்சி கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story