1.56 கோடி ரூபாயை வீசியெறிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மர்மநபர்


1.56 கோடி ரூபாயை வீசியெறிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மர்மநபர்
x
தினத்தந்தி 27 May 2019 5:12 AM GMT (Updated: 27 May 2019 5:12 AM GMT)

ஒரு கோடியே 56 லட்சம் ரூபாயை வீசியெறிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பிச் சென்றார்.

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் வரதாபுரம் ஏரிக்கரை லாக் தெருவில் காவல் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் அந்த இடத்தில் சுற்றிச்சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

மூன்றாவது முறையாக அந்த நபர் போலீசாரின் கண்களில் பட்டதையடுத்து விசாரணை செய்வதற்காக அந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் நிற்காமல் வேகமாகச் சென்றதால் சந்தேகம் வலுத்ததையடுத்து போலீசார் இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்றனர்.

போலீசார் தன்னை விடாமல் துரத்தியதை அடுத்து அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் இருந்த 3 பைகளை வீசியெறிந்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துரத்துவதை நிறுத்திவிட்டு ரோந்து வாகனத்தை விட்டுக் கீழிறங்கி பைகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

ஆனால் அதற்குள் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் வேகமாகச் சென்று தலைமறைவானதையடுத்து அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். கைப்பற்றப்பட்ட பணத்தை போலீசார் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதுகாத்து வருகின்றனர்.

Next Story