சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் - அமைச்சர் வேலுமணி


சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் - அமைச்சர் வேலுமணி
x
தினத்தந்தி 17 Jun 2019 6:34 AM GMT (Updated: 17 Jun 2019 9:45 AM GMT)

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் என அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டினார்.

சென்னை,

 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நடத்தியுள்ளார்.

இந்நிலையில் குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சினையை போல் இந்த குடிநீர் பிரச்சினையை கையாள வேண்டும். அனைவரும் உடனடியாக களத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூட்டத்தில்  அமைச்சர் வேலுமணி பேசினார். 

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் உத்தரவின் பேரில் உள்ளாட்சித்துறை  சார்பாக  ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.  ஒவ்வொரு மண்டலத்திலும் ஓவ்வொரு கண்காணிப்பாளர் போன்றோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். குடிநீர் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்பது குறித்து அதிகாரிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டு உள்ளது.
 
சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளனர்;  இதில் உண்மையில்லை. சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள். சென்னையில்  525  மில்லியன் லிட்டர் தண்ணீர் நவம்பர் மாதம் வரை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது 

சென்னையில் மழை இல்லாவிட்டாலும் கூடுதலாக தண்ணீர் வழங்குகிறோம். பொதுமக்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் விநியோகித்து வருகிறோம். தண்ணீர் பிரச்சினையால் எந்த ஓட்டல்களையும்  மூடவில்லை. ஓட்டல்களில் வாழை இலை, பாக்கு மட்டைகளை  பயன்படுத்த தொடங்கி விட்டனர்

குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கூறி உள்ளோம். ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவது வழக்கமானது தான் என கூறினார்.

Next Story