கணவர் கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Jun 2019 9:30 PM GMT (Updated: 20 Jun 2019 8:03 PM GMT)

கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் மனம் உடைந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆலந்தூர், 

கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் மனம் உடைந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளக்காதல்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காத்தாயி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காத்தாயியின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஆகும்.

அதே ஊரை சேர்ந்தவர் பாபு(48). கொத்தனாரான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பாபு குடும்பத்துடன் பள்ளிக்கரணை முத்தமிழ் தெருவில் வசித்து வந்தார்.

ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் காத்தாயிக்கும், பாபுவுக்கும் சிறு வயதில் இருந்தே பழக்கம் இருந்ததாக தெரிகிறது. காத்தாயி துணி துவைப்பதற்காக பாபு வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

கணவர் கண்டிப்பு

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்த ஏழுமலை, காத்தாயியை கண்டித்தார். இனிமேல் துணி துவைக்க பாபு வீட்டுக்கு செல்லக்கூடாது என்றும் கண்டிப்பாக கூறிவிட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாபுவின் மனைவி, தனது பிள்ளைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். வீட்டில் பாபு மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற காத்தாயி, இரவு ஆகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மனைவியை எங்கு தேடியும் காணாததால் சந்தேகம் அடைந்த ஏழுமலை, பாபு வீட்டுக்கு சென்று பார்த்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

பாபு வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு காத்தாயி மற்றும் பாபு இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கள்ளக்காதலை கணவர் ஏழுமலை கண்டித்ததால் மனம் உடைந்த காத்தாயி, கள்ளக்காதலன் பாபு உடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த பள்ளிக்கரணை போலீசார், தூக்கில் தொங்கிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story