திருவண்ணாமலையில் தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் சென்னை போலீஸ்காரர் பிணம் உறவினர்கள் மறியல்


திருவண்ணாமலையில் தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் சென்னை போலீஸ்காரர் பிணம் உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 7 July 2019 9:30 PM GMT (Updated: 7 July 2019 8:36 PM GMT)

திருவண்ணாமலையில் ரெயில் தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் போலீஸ்காரர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கோணலூர் பொலகுணம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டராமஜெயம் (வயது 30). இவர், சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு 13-வது அணியில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாரதி. திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டராமஜெயம் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர், தனது நண்பர்களுடன் திருவண்ணாமலையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் ரெயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் பிணமாக கிடந்தார்.

அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மணிகண்டராமஜெயம் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் இறந்து கிடப்பது அவர் தான் என்று உறுதி செய்தனர்.

பின்னர் அவர்கள் ரெயில் தண்டவாளத்தில் பிணத்துடன், சாவில் மர்மம் உள்ளதாக கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் காலை 6.30 மணி அளவில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் வந்தது. அவர்கள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து காலை 8.10 மணி அளவில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Next Story