பெரம்பலூரில் சினிமா காட்சி போல் சம்பவம்: காரில் கஞ்சா கடத்திய 2 பேரை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த போலீசார்


பெரம்பலூரில் சினிமா காட்சி போல் சம்பவம்: காரில் கஞ்சா கடத்திய 2 பேரை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த போலீசார்
x
தினத்தந்தி 13 July 2019 9:45 PM GMT (Updated: 13 July 2019 8:18 PM GMT)

பெரம்பலூரில் காரில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் காரில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவல்

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தி வந்து, அதனை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய இருப்பதாக மதுரை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் காரில் கஞ்சா கடத்தி வருபவர்களை பிடிக்க திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே ஒரு தனிப்படையினரும், இதேபோல் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மற்றொரு தனிப்படையினரும் நின்று கொண்டு அந்த வழியாக சந்தேகம்படும்படியாக வந்து கொண்டிருந்த கார்களை வழிமறித்து சோதனை செய்து கொண்டிருந்தனர்.

சினிமா பாணியில்...

இந்நிலையில் திருமாந்துறை சுங்கச்சாவடியின் வழியாக நேற்று மதியம் 12 மணி அளவில் சந்தேகம்படும்படியாக வேகமாக வந்து கொண்டிருந்த சிவப்பு நிற காரை போலீசார் மறிக்க முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதனை கண்ட போலீசார் அந்த காரில் கஞ்சா கடத்தி செல்லலாம் என்ற சந்தேகத்தில், அந்த காரை சினிமா பாணியில் பின்தொடர்ந்து போலீசார் தங்களது வாகனத்தில் துரத்தி சென்றனர்.

அப்போது சிறிது தூரத்திலேயே போலீசார் தங்களது வாகனத்தில், அந்த காரை முந்திச்சென்று முன்னால் போய் நிறுத்தினர். பின்னர் போலீசார் வாகனத்தில் இருந்து இறங்கி அந்த காரை சுற்றி வளைத்தனர். அப்போது காரை ஓட்டியவர், போலீசாரை தாக்குவதற்காக காரில் இருந்து ஏதோ துப்பாக்கி எடுப்பது போல் ஆயுதத்தை எடுக்க முயன்றார். இதனை சுதாரித்துக் கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வன் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.

180 கிலோ கஞ்சா

இதையடுத்து காரில் இருந்த 2 பேரும் காரின் கதவுகளை திறந்து தப்ப முயன்றனர். அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். போலீசார் அந்த காரை சோதனை செய்ததில் அதில், 180 கிலோ எடையுள்ள கஞ்சா பல பொட்டலங்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கஞ்சா கடத்தி வந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த முத்து மகன் முனியசாமி என்கிற படை முனியசாமி (வயது 29) என்பதும், மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எருமைகுளம் பகுதியை சேர்ந்த சிறை மீட்டான் மகன் வழிவிடும் முருகன் (19) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த படை முனியசாமியையும், வழிவிடும் முருகனையும் மற்றும் கஞ்சா கடத்த பயன்படுத்திய காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து அருகே உள்ள மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

கைது

மங்களமேடு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து படை முனியசாமியும், வழிவிடும் முருகனையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியை தாண்டும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story