ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம்


ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 14 July 2019 9:30 PM GMT (Updated: 14 July 2019 8:00 PM GMT)

ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசியபடி மோட்டார் சைக்கிளில் வாலிபர் சென்ற போது செல்போன் வெடித்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசியை அடுத்த குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). இவர் நேற்று காலை சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்றார்.

அப்போது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென்று வெடித்தது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக சூளகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

செல்போன் வெடித்தத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சூளகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story