சந்திரயான்-2: இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை; இஸ்ரோ தலைவர் பேட்டி


சந்திரயான்-2:  இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை; இஸ்ரோ தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2019 8:24 AM GMT (Updated: 21 July 2019 8:24 AM GMT)

சந்திரயான்-2 செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்தில் இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்து உள்ளார்.

நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் செய்யப்போகிறது.

இந்த விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15-ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ‘கவுண்ட்டவுனும்’ நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து வரும் 22-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்துடன், ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுபற்றி இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சந்திரயான்-2 நாளை மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது.

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.  இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என அவர் கூறியுள்ளார்.

சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன.  சந்திரயான்-2 ஏவுகணை நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story