சமூக வலைத்தளங்களில் குற்றச்செயலில் ஈடுபடுவோரின் விவரங்களை பெறுவது எப்படி? ஐ.ஐ.டி. பேராசிரியர் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சமூக வலைத்தளங்களில் குற்றச்செயலில் ஈடுபடுவோரின் விவரங்களை பெறுவது எப்படி? ஐ.ஐ.டி. பேராசிரியர் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 July 2019 9:45 PM GMT (Updated: 25 July 2019 8:08 PM GMT)

சமூக வலைத்தளங்களில் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களின் விவரங்களை எப்படி பெறுவது? என்பது குறித்து விளக்கம் தெரிவிக்க ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் ஆண்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், “சமூக வலைத்தளங்களில் ஏராளமான குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்க அவர்களது ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் இணைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வாட்ஸ்-அப்’ தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘யூடியூப் வலைத்தளத்தில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் வீடியோக்கள் பகிரப்பட்டால், அதற்கு வாட்ஸ்-அப் நிறுவனம் எப்படி பொறுப்பேற்க முடியும்?’ என்று வாதிட்டார்.

சிக்கல் இல்லை

முகநூல் (பேஸ்புக்) சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், “உலகம் முழுவதும் சுமார் 500 கோடி பேர் முகநூலை பயன்படுத்துகின்றனர். இதில், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எப்படி அடையாளம் காணமுடியும்? அவர்களது தகவல் களை அரசுக்கு வழங்குவது இயலாத காரியம்” என்று வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனரும், ஐ.ஐ.டி. பேராசிரியருமான மதுசூதனன் ஆஜராகி, “வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள். இவை இந்தியாவில் இயங்கும்போது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். வாட்ஸ்-அப் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தகவல் களை ‘பார்வேர்டு’ செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை சமூக வலைத்தள நிறுவனங்களால் அரசுக்கு வழங்க முடியும். இதில் எந்த நடைமுறை சிக்கலும் இல்லை” என்று கூறினார்.

விளக்கம் வேண்டும்

இதையடுத்து நீதிபதிகள், “சமூக வலைத்தளத்தில் குற்றம் புரிவோரின் தகவல்களை அந்த நிறுவனங்களிடம் இருந்து எப்படி பெறுவது? அதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? என்பது குறித்து பேராசிரியர் மதுசூதனன் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல சமூக வலைத்தள நிறுவனங்கள் அரசு கேட்கும் தகவல்களை எவ்வாறு வழங்க முடியும்? என்பது குறித்து தங்கள் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையை ஆகஸ்டு 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story