நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மட்டுமே அ.தி.மு.க. அறிவிக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு


நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மட்டுமே அ.தி.மு.க. அறிவிக்கும் -  எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 27 July 2019 11:45 PM GMT (Updated: 27 July 2019 8:34 PM GMT)

மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதது என்றும், மக்களுக்கு நிறை வேற்ற முடியும் திட்டங் களை மட்டுமே அ.தி.மு.க. அறிவிக்கும் என்றும் வாணியம்பாடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வேலூர்,

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நேற்று வாணியம்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எதற்காக நிறுத்தப்பட்டது என்பது பொதுமக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். மீண்டும் தேர்தல் ஏன் வந்தது என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

மக்களுக்கு எதை நிறைவேற்ற முடியுமோ, எதை செய்துதர முடியுமோ அதை மட்டும் தான் அறிவிப்போம். அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் ஒரே கட்சி அ.தி.மு.க. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து உங்களிடத்திலே வாக்குகளைப் பெற்றார்.

நிறைவேற்ற முடியாதது

ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற முடியாதது. அதாவது 5 பவுன் நகை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தால் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். தி.மு.க. தற்போது ஆட்சியிலா இருக்கிறது. இதை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து, மக்களின் காதுகளில் பெரிய கடுக்கு போட்டுவிட்டார். இது பச்சைப் பொய். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களிடம் வாக்குகளை பெறுவதுதான் தி.மு.க.வின் எண்ணம்.

ஸ்டாலினின் ஆட்சிக் கனவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வைவிட அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதற்கு பொய்யான வாக்குறுதியை அளித்து, மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்றது தான் காரணம். தமிழகத்தில் ஆட்சியில் அமர்வோம் என ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் நடைபெற்றிருக்கிறது என்று சொல்லி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் இந்த அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். நகரத்தில் வாழ்கிற மக்களுக்கு கான்கிரீட் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும். எத்தனை லட்சம் மக்கள் வீடுகள் கேட்டாலும் அத்தனை லட்சம் மக்களுக்கும் அ.தி.மு.க. அரசு அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரும். அந்த வகையில் வாணியம்பாடி நகரத்தில் வசிக்கின்ற ஏழை, எளிய வீடு இல்லாத தொழிலாளர் நண்பர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும். அதேபோல கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படுகின்றது.

பொய் மூட்டைகள்

இந்தப்பகுதி மக்கள் பெரும்பாலும் பயனடையும் வகையில் ரூ.1,300 கோடி மதிப்பில் பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீரை கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஆனால், ஸ்டாலின் ஊர் ஊராக பேசுகிறார், அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார். அதற்காக இந்த விளக்கத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

தொழிற்சாலைகள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று ஸ்டாலின் பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. இன்றைக்கு ஆம்பூர், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் நிறைந்திருக்கிறது. இதற்கு காரணம் தேவையான மின்சாரம் கிடைப்பதனால் தான்.

மக்கள் பணி செய்வார்

ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தற்போது தமிழகத்தின் மின் தேவை ஏறத்தாழ 16 ஆயிரம் மெகாவாட். ஆனால், 19 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு மின்மிகை மாநிலமாக உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வெற்றி வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, கொடுத்த வாக்குறுதிகளை, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாத நிலையிலும் நிறைவேற்றியிருக்கிறார். இவர் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினரானால், மேலும், சிறந்த முறையில் மக்கள் பணி செய்வார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story