வேலூர் தேர்தல்; வாக்குச்சாவடி மையத்தில் சி.சி.டி.வி. கேமிரா உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை


வேலூர் தேர்தல்; வாக்குச்சாவடி மையத்தில் சி.சி.டி.வி. கேமிரா உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 4 Aug 2019 7:54 AM GMT (Updated: 4 Aug 2019 7:54 AM GMT)

வேலூர் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் சி.சி.டி.வி. கேமிரா உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.  வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும்.  வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் அறிவிப்பினை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன.  தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியின் தலைவர்கள் தீவிர அரசியல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இதனிடையே, வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள குடியாத்தம் அரசு பள்ளியில் சி.சி.டி.வி. கேமிரா உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு திருமகள் கல்லூரி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் 11 கம்யூட்டர்கள் கொண்டு ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர் நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி இப்பள்ளியில் 29, 30 மற்றும் 32 ஆகிய வார்டுகளுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம கும்பல் ஸ்மார்ட் வகுப்பில் இருந்த 11 கம்யூட்டர்கள், பிரிண்டர், போன் மற்றும் தேர்தல் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் என ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

இன்று காலை தேர்தல் பணிக்காக பள்ளிக்கு சென்ற அதிகாரிகள் பள்ளியின் 5 வகுப்பு அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு கம்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story