மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடியை தாண்டியது ஒரே நாளில் 11 அடி உயர்ந்தது


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடியை தாண்டியது ஒரே நாளில் 11 அடி உயர்ந்தது
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 7:50 PM GMT)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர், 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து, 73 அடியை தாண்டியது.

மேட்டூர் அணை

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. தற்போது வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல்-மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் கிடு,கிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 62.50 அடியாக அதிகரித்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

ஒரே நாளில் 11 அடி உயர்வு

இந்தநிலையில் நேற்று காலை மேட்டூருக்கு வினாடிக்கு 93 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. பின்னர் நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 73.50 அடியாக உயர்ந்தது. இதன்படி ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

மேலும் ஒகேனக்கல்லில் இருந்து வரும் தண்ணீர் சேலம் மாவட்ட எல்லையான அடிபாலாறு பகுதியில் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர கிராமங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தண்டோரா மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2.73 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி உயரமாகும். இதில் தற்போது நீர்மட்டம் 73 அடியை தாண்டிவிட்டது. மேலும், காவிரியில் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒருவாரத்தில் அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story