இறுதிச்சடங்குக்கு பணம் இல்லாததால் தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்


இறுதிச்சடங்குக்கு பணம் இல்லாததால் தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 10:15 PM GMT)

இறுதிச்சடங்குக்கு பணம் இல்லாததால் தாயின் உடலை குப்பையில் வீசிய மகன் வறுமையின் கொடுமையால் நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தனசேகரன்நகர் பகுதியில் மாநகராட்சி குப்பைத்தொட்டிக்கு அருகில் சிதறிக்கிடந்த குப்பைக்கழிவுகளுக்கு மத்தியில் நேற்று பெண் பிணம் கிடப்பதை துப்புரவு தொழிலாளர்கள் பார்த்து சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடத்திய விசாரணையில், வறுமையின் காரணமாக பெற்ற தாயின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால் அவரது மகனே குப்பை தொட்டியில் வீசி சென்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் தெரியவந்தது.

பிணமாக கிடந்த அந்த பெண்ணின் பெயர் வசந்தி (வயது 50). அவருடைய கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு முத்துலட்சுமணன் (29) என்ற மகன் உள்ளார். நாராயணசாமி சென்னையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி உள்ளார். இதனால் வசந்தி தனது மகன் முத்துலட்சுமணனுடன் வசித்து வந்தார். முத்துலட்சுமணன் கோவில் பூசாரியாராக உள்ளார். அவர் போதிய வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

நோயால் பாதிக்கப்பட்டு இருந்த வசந்தி நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார். தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் முத்துலட்சுமணன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். மனதை கல்லாக்கிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார். தனது வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத்தொட்டிக்கு அருகில் தாயின் உடலை வீசினால் அதை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து சென்று அடக்கம் செய்து விடுவார்கள் என்று நினைத்து அங்கு தாயின் உடலை வீசி உள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வசந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முத்துலட்சுமணனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிலர் உதவியுடன் இறுதிச்சடங்கு நடந்தது.

Next Story