காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து வருத்தம் அளிக்கிறது - கே.எஸ்.அழகிரி


காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து வருத்தம் அளிக்கிறது - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 15 Aug 2019 8:33 PM GMT (Updated: 15 Aug 2019 8:33 PM GMT)

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் ஏற்பாட்டில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் சென்னை சத்தியமூர்த்திபவனில் இருந்து வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை, 

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் ஏற்பாட்டில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் சென்னை சத்தியமூர்த்திபவனில் இருந்து வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கே.எஸ்.அழகிரி வழி அனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசியல் சாசனத்தின் 370–வது பிரிவை நீக்கி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கை ராஜதந்திர நடவடிக்கை என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உரிமையை பறிப்பது எப்படி ராஜதந்திரம் ஆகும்? ரஜினிகாந்தின் வார்த்தை எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

வேலூரை 3 மாவட்டங்களாக பிரிப்பது நிச்சயம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எப்போதுமே மாவட்டங்களை பிரிப்பது தவறு என்று சொல்லமாட்டேன். ஏனெனில் மாவட்டங்களை பிரிப்பதின் மூலமாக சில வளர்ச்சிகளை எட்டமுடியும். ஆனால் அந்த மாவட்ட மக்களின் உணர்வு எப்படி இருக்கிறது? என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story