விடிய விடிய கனமழை... சென்னை- சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மழை


விடிய விடிய கனமழை... சென்னை- சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மழை
x
தினத்தந்தி 17 Aug 2019 7:40 AM GMT (Updated: 17 Aug 2019 7:40 AM GMT)

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை 

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இதேபோல், செங்கல்பட்டிலும் விடிய விடிய கனமழை பெய்தது.  கூடுவாஞ்சேரி, வண்டலூர், உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கும்பகோணத்தில் 5 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலை முதல் கன மழை பெய்தது.  இதன் காரணமாக பூமி குளிர்ந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இந்த மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளான பாடாலூர், வேப்பந்தட்டை, குன்னம், வேப்பூர், வாலிகண்டபுரம், மங்கலமேடு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை 6 மணி முதல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.மழையின் காரணமாக கிணறு,p; குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்க துவங்கியுள்ளது.

நாமக்கல்  மாவட்டத்தில்,இரவு முழுவதும் சாரல் மலை பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக வறட்சியான வானிலை நிலவி வந்த போதிலும் நேற்று  வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலையில் மேகங்கள் திரண்டு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்தது.இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காலநிலை ஏற்பட்டது. 
 
சென்னையில் கிண்டி , அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி  உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்து உள்ளார்.

ஈரோடு, தருமபுரி, காஞ்சிபுரம், மேல்மருவத்தூர், திருவள்ளூர், திருத்தணி, திருவண்ணாமலை, ஓசூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், தற்போது பெய்துவரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மதியம் வரை விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், அடுத்த சில நாட்களுக்கு இதேபோல் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story