உள்ளூரில் வீணாக தண்ணீர் கடலில் கலக்கிறது நீர் சிக்கனம் பற்றி அறிய முதல்-அமைச்சர் இஸ்ரேல் செல்வது வேடிக்கை மு.க.ஸ்டாலின் விமர்சனம்


உள்ளூரில் வீணாக தண்ணீர் கடலில் கலக்கிறது நீர் சிக்கனம் பற்றி அறிய முதல்-அமைச்சர் இஸ்ரேல் செல்வது வேடிக்கை மு.க.ஸ்டாலின் விமர்சனம்
x
தினத்தந்தி 11 Sep 2019 9:30 PM GMT (Updated: 11 Sep 2019 7:46 PM GMT)

உள்ளூரில் தண்ணீரை வீணாக கடலில் கலக்க அனுமதித்துவிட்டு நீர் சிக்கனம் பற்றி அறிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரேல் செல்வேன் என்று கூறியிருப்பது வேடிக்கை என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை, 

உள்ளூரில் தண்ணீரை வீணாக கடலில் கலக்க அனுமதித்துவிட்டு நீர் சிக்கனம் பற்றி அறிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரேல் செல்வேன் என்று கூறியிருப்பது வேடிக்கை என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

வேதனை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்கிறேன் என்று வெளிநாடுகளில் 2 வாரச் சுற்றுலா முடித்து, சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கியவுடன் பேட்டி அளித்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் காவிரி டெல்டாவில் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச் சேரவில்லை.

100 டி.எம்.சி. தண்ணீர் வீண்

கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண்மைக்கும், குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் இப்படி பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் ரூ.480 கோடியில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாகியும், பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி அதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டப்படவில்லை.

அதுபற்றியோ, கடலில் கலக்கும் காவிரி நீரை உரிய வகையில், வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறையும் இல்லை, ஆர்வமும் இல்லை. நானும் ஒரு விவசாயி என்று மூச்சுக்கு 300 முறை சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடுவதிலேயே முதல்-அமைச்சர் கவனமுடன் செயல்படுகிறார்.

புதுப்பணித்துறையாக...

நீர் மேலாண்மையில் அ.தி.மு.க அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பொதுப்பணித்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் காட்டும் அலட்சியத்தால் பொதுப்பணித்துறை இப்போது வருகின்ற தண்ணீரையும் பாதுகாக்க முடியாமல் வீணடிக்கும் புதுப்பணித் துறையாக மாற்றப்பட்டு உள்ளது.

குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் ‘கமிஷன்’ அடிக்கும் பணியாக நடைபெற்று வருகிறது. வீட்டையே முறைப்படுத்த வக்கற்றவர், நாட்டை முறைப்படுத்தக் கிளம்பி விட்டார் என்று பொது வெளியில் கேலி பேசுவது எடப்பாடிக்கு எட்டவில்லை போலிருக்கிறது.

கோடையிலும், வறட்சியிலும் பாதிப்புக்குள்ளாகி, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் குடங்களை தூக்கிக் கொண்டு இரவு, பகலாக அலைந்த தாய்மார்கள் இன்று காவிரி நீர் கடலில் கலப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, காவிரி நீரைச் சேமிப்பதற்கும் நன்கு பயன்படுத்துவதற்கும் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிவித்த கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டங்களை, அறிவிப்போடு இழுத்து மூடிவிடாமல், உடனடியாக நிறைவேற்றி கொள்ளிடத்தில் இருந்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

வினோதம்

உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது.

ஆதலால், ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது விரைந்து நிறைவேற்றிட எடப்பாடி பழனிசாமி முன்வந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story