சென்னையில் 2 நாட்கள் சிறப்பு விசாரணை: தேசிய மனித உரிமை ஆணையம் மூலம் 71 வழக்குகளுக்கு தீர்வு


சென்னையில் 2 நாட்கள் சிறப்பு விசாரணை: தேசிய மனித உரிமை ஆணையம் மூலம் 71 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 Sep 2019 9:54 PM GMT (Updated: 13 Sep 2019 9:54 PM GMT)

தேசிய மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு விசாரணை சென்னையில் 2 நாட்கள் நடந்தது. இதில், 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் பூரண குணமடைய வேண்டி அலகு குத்திய 20 சிறுமிகளுக்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது சென்னையில் 2 நாட்கள் சிறப்பு விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, இந்த விசாரணை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம் 179 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இந்த வழக்குகளை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுமான எச்.எல்.தத்து தலைமையில் உறுப்பினர்கள் பி.சி.பான்ட், ஜோதிகா கல்ரா, தியானேஸ்வர் முலாய் ஆகியோர் விசாரித்தனர். இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விசாரணை முடிவில், 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

இந்த விசாரணை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் எச்.எல்.தத்து மற்றும் உறுப்பினர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

போலீஸ் விசாரணையின் போது ஒரு நபரை துன்புறுத்தி அவரது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்படும் வகையில் தாக்கியது குறித்தும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் பூரண குணமடைய வேண்டி 20 சிறுமிகளின் கன்னங்களில் அலகு குத்தப்பட்டது (சென்னை தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடத்திய நிகழச்சி) குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த 2 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்து போன விவகாரம், 10 பொது பிரச்சினைகள் குறித்து தனியார் தொண்டு நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன. சமீபகாலமாக விசாரணை கைதிகளை போலீசார் கடுமையாக தாக்கி கை, கால்களில் எலும்பு முறிவை ஏற்படுத்தி காயப்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டது. இதுபோன்று பாதிக்கப்பட்ட 91 பேர் விசாரணை கைதிகளாக சிறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒரு குழுவை நியமித்து சிறைகளில் விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


‘தேசிய மனித உரிமை ஆணையத்தில் மொத்தம் 600 பேர் புகார் மனு அளித்த போதிலும் வெறும் 179 மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் தமிழில் கூறியதை ஆங்கிலத்தில் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மொழி பெயர்த்து கூறுவதற்கு யாரும் நியமிக்கப்படவில்லை’ என்று மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்ததும், பெங்களூரைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண் மனித உரிமை ஆணையத்தால் தனக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை என்று கூச்சலிட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

Next Story