ரூ.12.76 கோடியில் கட்டப்பட்ட 14 சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


ரூ.12.76 கோடியில் கட்டப்பட்ட 14 சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 19 Sep 2019 10:43 AM GMT (Updated: 19 Sep 2019 12:44 PM GMT)

வேலூர், கடலூர், மதுரை மற்றும் நெல்லையில் ரூ.12.76 கோடியில் கட்டப்பட்ட 14 சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், பாச்சூர் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகளை காணொலிக் காட்சி  மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார்.

உணவு பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக புதிதாக கூடுதல் கிடங்குகள் கட்டப்படும் என்று  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், பாச்சூர் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொட்டாரம் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்.

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், இடையப்பட்டி கிராமத்தில் 2 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 8 சேமிப்புக் கிடங்குகள் என மொத்தம், 12 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 சேமிப்புக் கிடங்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், வேலூரில் ரூ.69.49 கோடியில் கட்டப்பட்டுள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும் பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கும் திட்டத்தின்கீழ், பழைய காகித வடிவிலான குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக, மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நடைமுறை 1.04.2017 அன்று முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த காகித வடிவிலான அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாற்றாக புதிய
மின்னணு குடும்ப அட்டைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது அனைத்து மின்னணு குடும்ப அட்டைகளும் மைய அளவில் சென்னையில் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தங்கள் அனைத்தும் www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக பெறப்பட்டு, துறை அலுவலர்களின் கள ஆய்வுக்கு பின்னர் கோரிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.

மைய அளவில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும், பயனாளிகளுக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாகவும், மாவட்ட அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக, புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கோரும் பயனாளிகளுக்கு மாவட்ட அளவிலேயே புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு விலையில்லாமல் வழங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், நடைமுறையில் உள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் பயனாளிகள் கோரிய திருத்தங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட மின்னணு  குடும்ப அட்டையை, சம்மந்தப்பட்ட பயனாளிகள் ரூ.20/- கட்டணமாக செலுத்தி, மாவட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், சென்னையில் உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தற்போது மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின்கீழ் திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இன்று வழங்கி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ,  உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா. காமராஜ், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி மு. சுதா தேவி, இ.ஆ.ப., உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் திரு. ஆர். கண்ணன், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் திரு.கு.கோவிந்தராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story