இரு தலைவர்களின் சந்திப்பை நினைவுபடுத்தும் வகையில் மோடி-ஜின்பிங் கைகுலுக்கும் கற்சிற்பம்
பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கைகுலுக்குவது போன்ற கற்சிற்பம் சிற்பி பசுலுதீன் என்பவர் மூலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நினைவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கைகுலுக்குவது போன்ற கற்சிற்பம் சிற்பி பசுலுதீன் என்பவர் மூலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இரு நாட்டு தலைவர்களை கவுரவப்படுத்தும் வகையில் மாமல்லபுரம் திட்டக்குழுமம் சார்பில் 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சிரித்துக்கொண்டு கைகுலுக்கும் வடிவத்தில் கல்லில் இருவர் உருவம் பொறித்த சிற்பம் அழகுற வடிவமைக்கப்பட்டது. இந்த கற்சிற்பம் 25 கிலோ எடையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்பம் மாமல்லபுரம் மக்கள் சார்பில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
கடலை ரசித்தபடி ஜின்பிங்குடன் ஆலோசனை நடத்திய மோடி
பி ரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த 2 நாள் பயணமாக சென்னை வந்த சீன அதிபர், முதல் நாளில் மாமல்லபுரம் சிற்பங்களை பார்த்து ரசித்தபடி நடந்துகொண்டே மிக இயல்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
2-வது நாளான நேற்று, பிரதமர் மோடி தங்கி இருந்த தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் நடந்த பேச்சுவார்த்தையில் ஜின்பிங் பங்கேற்றார். கடற்கரையோரம் இருந்த ஓட்டலில், கண்ணாடி அறையில் அமர்ந்தபடி கடலையும் இயற்கையையும் ரசித்தபடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர்.
‘பிரியாவிடை’ கொடுத்த தமிழர்கள்
த மிழகம் வந்த ஜின்பிங்கிற்கு 2 நாட்களும் தொடர்ந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஜின்பிங் புறப்பட்டபோதும் மாமல்லபுரம் முதல் சென்னை விமான நிலையம் வரை வழிநெடுக அவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் கிராமிய கலைஞர்களின் பொய்க்கால் குதிரை, மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. செண்டை மேளம் இசைக்கப்பட்டு ஜின்பிங்கிற்கு பிரியா விடை அளிக்கப்பட்டது. தமிழர்களின் பிரிவு உபசாரங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் விமானம் ஏறினார், ஜின்பிங்.
தமிழகத்தின் விருந்தோம்பலை மறக்க முடியாது-ஜின்பிங்
பி ரதமர் மோடியுடன் உரையாடுவதற்காக தமிழகம் வந்த சீன அதிபர் ஜின்பிங்கிற்கு 2 நாட்களும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை அவர் ருசித்து சாப்பிட்டார். பிரதமர் மோடியுடன் மாமல்லபுரம் சிற்பங்களையும் அவர் ரசித்து, வியந்தார்.
தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து, மோடியுடனான 2-வது நாள் ஆலோசனை கூட்டத்தில் ஜின்பிங் பேசினார். அப்போது அவர், ‘தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நானும், எனது நண்பர்களும் நன்றாக உணர்ந்துள்ளோம். தமிழகத்தின் விருந்தோம்பல் எனக்கும் உடன் வந்தவர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மிகவும் சிறப்பான வரவேற்பு அளித்தமைக்கு நன்றி. இருநாட்டு உறவும் மேம்பட்டு வருகிறது. இதுபோன்ற பேச்சுவார்த்தை தொடர வேண்டும்’ என்றார்.
சீன அதிபரின் இத்தகைய கருத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story