தி.மு.க. வெற்றி பெற்றால் ஒரு நம்பர் தான் அதிகரிக்கும் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேறும் விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தி.மு.க. வெற்றி பெற்றால் ஒரு நம்பர் தான் அதிகரிக்கும் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேறும் விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 12 Oct 2019 10:30 PM GMT (Updated: 12 Oct 2019 8:58 PM GMT)

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஒரு நம்பர் தான் அதிகரிக்கும் என்றும், அ.தி.மு.க. வெற்றி பெற்றால் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேறும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து நேற்று மாலை முண்டியம்பாக்கம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சொந்த காலில் நிற்கிறோம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எங்களை பார்த்து விபத்தில் வந்த முதல்-அமைச்சர் என்று கிண்டல் செய்கிறார். எங்களை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நாங்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்து, சொந்த காலில் நிற்கிறோம். உங்களை போன்று தந்தையின் நிழலில் நின்று பதவிக்கு வரவில்லை.

இந்த ஆட்சி 10 நாளில் போய்விடும், விரைவில் போய்விடும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது 2 ஆண்டு 8 மாத காலம் கடந்து சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம். உங்களது எண்ணம் எப்போதும் ஈடேறாது.

எதிர்க்கட்சி அந்தஸ்து

அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்று எண்ணி சிலரை பிரித்தீர்கள். அதுவும் எடுபடாமல் போனதால் நடுத்தெருவில் நிற்கிறீர்கள். அ.தி.மு.க. ஆட்சி எந்த காலத்திலும் கலையாது. 2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற்று, அ.தி.மு.க. தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்.

எதிர்க்கட்சி மாதிரி நடந்து கொண்டால் எதிர்காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். இல்லையெனில் அந்த வாய்ப்பை கூட மக்கள் உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள்.

பல்வேறு வளர்ச்சி பணிகள்

திண்ணை பிரசார நாடகம் நடத்தி பொய் பேசி வரும் மு.க.ஸ்டாலினுக்கு இந்த இடைத்தேர்தல் மூலம் தக்க பாடம் புகட்டுங்கள். பொய் தான் அவருக்கு மூலதனம். அதை வைத்து தான் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார். ஆட்சியில் இல்லாதபோது, நீங்கள் திண்ணை பிரசாரம் செய்து என்ன செய்ய போகிறீர்கள்?.

அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு நன்மை செய்ய தவறிய மு.க.ஸ்டாலின், இப்போது திண்ணையில் அமருகிறார். மனுக்களை வாங்குகிறார். அவ்வாறு பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களை அவர், யாரிடம் கொடுப்பார்?. அதை முதலில் சொல்லுங்கள். இப்படித்தான் மக்களை ஏமாற்றுகிறார். அவர் செல்லும் இடமெங்கும் மனுவை வாங்கி நன்மை செய்கிறேன் என்கிறார். எந்த காலத்துக்கும் உங்களால் நன்மை செய்ய முடியாது. உங்களது பொய் மூட்டைகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்து, வெளுத்து போய்விட்டது. ஆகையால் இனி மக்களிடம் எடுபடாது.

எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஒரு நம்பர் தான் அதிகரிக்கும். ஆனால் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story