பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய தோழி அமைப்பு; போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்


பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய தோழி அமைப்பு; போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:43 PM GMT (Updated: 9 Nov 2019 10:43 PM GMT)

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு உதவி செய்வதற்காக ‘தோழி’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தோழி என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட பெண்கள் வசிக்கும் இடம் தேடி சென்று அவர்களுக்கு மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உடனுக்கு உடன் உதவி செய்யும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் போலீஸ் பிரிவு இந்த தோழி அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இந்த அமைப்பில் பணியாற்றுவதற்காக 70 பெண் போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பெண் போலீசாருக்கு இளஞ்சிவப்பு நிற சேலை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. தோழி அமைப்பின் தொடக்க விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தோழி அமைப்பை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ‘இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னைதான் விளங்குகிறது. தொடர்ந்து அந்த பெருமை நிலைநாட்டப்படும்’ என்றார்.

துணை கமிஷனர் ஜெயலட்சுமி பேசும்போது, ‘கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பாலியல் குற்றங்கள் தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 25 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது’ என்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தோழி அமைப்பில் இடம் பெற்றுள்ள பெண் போலீசாருக்கு விசேஷ பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story