கழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம்: பொதுமக்கள் எதிர்ப்பு


கழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம்:  பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Nov 2019 12:32 PM GMT (Updated: 13 Nov 2019 12:32 PM GMT)

கழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டு இருந்ததனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீலகிரி,

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் ஊராட்சி அளவிலான மகளிர் சுயஉதவி குழு கூட்டமைப்பு அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 5 அடி பீடத்தில் 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலை கடந்த 3ந்தேதி இரவு சேறு, சகதி வீசி அவமதிப்பு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட அந்த பகுதி மக்களை போலீசார் அமைதிப்படுத்தினர்.  பின்னர் சிலை மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதுபற்றிய தகவல் அறிந்து தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றி கொண்டது.  பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.  திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை 4 தனிப்படை கொண்ட போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரியில் கழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரெயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கழிப்பிடத்தில் தமிழக கலாச்சாரங்கள் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டு வந்தன.

இதில், கழிப்பிடத்தில் சாமி சிலை மற்றும் திருவள்ளுவர் உருவ ஓவியங்கள் வரையப்பட்டன.  இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து அவை உடனே அழிக்கப்பட்டு உள்ளன.

Next Story