ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடந்தது


ஊரக உள்ளாட்சி தேர்தல்:   மாநில தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்   ஆணையர் பழனிசாமி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 13 Dec 2019 9:35 PM GMT (Updated: 13 Dec 2019 9:35 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு குறித்து மாநில தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடந்தது.

சென்னை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி தலைமையில் நேற்று தேர்தல் பார்வையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தேர்தல் நடைபெறும் போது தேர்தல் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மேலும், வேட்புமனுக்கள் முறையாகப் பெறப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வேட்புமனு பரிசீலனை

மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கூட்டம் நடத்தி, நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, எவ்விதமான விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நடு நிலையோடு வேட்புமனு பரிசீலனை நடைபெறுவதை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாகவும், முறையாகவும் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும், அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

சுதந்திரமாக தேர்தல்

மேலும், வாக்குச்சாவடி மையங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சுதந்திரமாக வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தபிறகு வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தக்க பாதுகாப்போடு கொண்டு செல்ல எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்ய வேண்டும் என பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் வெளிப்படை தன்மையுடனும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து தேர்தல் பார்வையாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story