உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2-வது பட்டியல் 10 மாவட்டங்களுக்கு வெளியானது


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2-வது பட்டியல் 10 மாவட்டங்களுக்கு வெளியானது
x
தினத்தந்தி 14 Dec 2019 11:39 PM GMT (Updated: 14 Dec 2019 11:39 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2-வது பட்டியல் 10 மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தமிழகத்தில் 2 கட்டங்களாக வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில், தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய 7 மாவட்டங்கள் இடம் பெற்றிருந்தன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

10 மாவட்டங்களுக்கு வெளியீடு

இந்த நிலையில், நேற்று இரவு அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2-வது பட்டியல் 10 மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டது. அதாவது, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், தஞ்சை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி தெற்கு ஆகிய 10 மாவட்டங்கள் இந்த 2-வது பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதுவரை, அ.தி.மு.க.வில் 17 மாவட்டங்களுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் நிறைய மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) முடிய இருப்பதால், 3-வது மற்றும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story