வரத்து குறைவால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனை


வரத்து குறைவால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 Jan 2020 10:15 PM GMT (Updated: 11 Jan 2020 8:45 PM GMT)

வரத்து குறைவால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனை ஆனது.

சென்னை,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் தோறும் 70 லாரிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்தநிலையில் தற்போது வரத்து பெருமளவில் குறைந்து இருப்பதாகவும், இதனால் சில பூக்களின் விலை அதிகரித்து இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வரத்து குறைந்து போனதால் கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்றுமுன்தினம் ரூ.1,500-க்கு விற்பனை ஆன நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், முல்லை மற்றும் ஜாதிப்பூ விலையும் உயர்ந்து இருக்கிறது. இது தவிர அரளி, கனகாமரம், சம்மங்கி, செண்டுமல்லி, பெங்களூரு மற்றும் தாஜ்மஹால் ரோஜாப்பூ விலையும் கணிசமாக உயர்ந்து இருந்தது.

இதில் சாமந்திப்பூ மட்டும் வரத்து அதிகரித்து இருந்ததால் விலை குறைந்து காணப்படுகிறது. ஒரு கிலோ சாமந்திப்பூ நேற்று ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காமராஜர் பூ வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அருள் விசுவாசம் கூறுகையில், ‘பனி காலத்தில் பூக்களின் வரத்து குறைந்துவிடும். அந்தவகையில் மல்லிகைப்பூ உள்பட சில பூக்களின் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டு, விலை உயருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி மேலும் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை ஆன பூக்களின் விலை நிலவரம்(ஒரு கிலோ) வருமாறு:-

மல்லிகை- ரூ.1,800, முல்லை- ரூ.700, ஜாதி- ரூ.700, அரளி- ரூ.150, சாமந்தி- ரூ.40, கனகாமரம்- ரூ.300, சம்மங்கி- ரூ.60, செண்டுமல்லி- ரூ.40, பட்டுரோஸ்- ரூ.40, தாமரைப்பூ(ஒன்று)- ரூ.10, பெங்களூரு ரோஸ்- ரூ.80, தாஜ்மஹால் ரோஸ்(24 பூக்கள்)- ரூ.150.

Next Story