சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் எழுதினார்கள்


சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 12 Jan 2020 10:45 PM GMT (Updated: 12 Jan 2020 8:38 PM GMT)

தமிழகம் முழுவதும் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.

சென்னை,

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. 32 மையங்களில் நடந்த எழுத்து தேர்வில் 22 ஆயிரத்து 500 பெண்கள் உள்பட 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் காலை 7 மணி முதலே ஆர்வமாக தேர்வு எழுத மையங்களுக்கு வந்தனர். சென்னையில் 15 கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருந்த மையங்களில் 3 ஆயிரம் பெண்கள் உள்பட 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு, 140 கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டிருந்தன. பொது அறிவு பிரிவில் 80 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

போலீஸ் பாதுகாப்பு

கேள்விகள் பாதி எளிதாகவும், மீதி கஷ்டமாகவும் இருந்தன என்று தேர்வு எழுதி விட்டு வந்த இளைஞர்கள் தெரிவித்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தேர்வு நல்ல முறையில் நடந்து முடிந்ததாக, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

Next Story