சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 10 மாதம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சசிகலா சிறையில் இருப்பது குறித்தும், தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சசிகலா சிறையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.அவர் வெளியே வந்தால் மகிழ்ச்சியடைவேன்.
அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரிவியவில்லை. அவர் வெளியே வந்தால், கண்டிப்பாக அவரை சென்று வரவேற்பேன். வன்முறையால் அதிமுகவை அடக்க முடியாது. ரவீந்திரநாத் கார் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும். எங்களுக்கு வீரம் இருக்கிறது. நாங்களும் சண்டை போடுவோம். நாங்கள் வீறு கொண்டால் சிங்கத்தைப் போல் சீறுவோம். அந்த அளவுக்கு அதிமுகவினர் கோழைகள் இல்லை. இதற்கு பின் திமுக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது என்று குறிப்பிட்டார்.
சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story