குரூப்-4 தேர்வு முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் உள்பட மேலும் 2 பேர் கைது-50 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீச்சு


குரூப்-4 தேர்வு முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் உள்பட மேலும் 2 பேர் கைது-50 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Jan 2020 11:45 PM GMT (Updated: 26 Jan 2020 10:02 PM GMT)

குரூப்-4 தேர்வு முறை கேடு வழக்கில் அதிரடி திருப்பமாக டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகள் 50 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலை விரித்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது.

விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்பு செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

முறைகேட்டில் சிக்கிய 99 தேர்வர்கள் இடைத்தரகர்கள் ஆலோசனையின்பேரில் சில மணி நேரத்தில் மறையக் கூடிய சிறப்பு மையிலான பேனா(மேஜிக் பேனா) மூலம் ராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட கீழக்கரை, ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

குரூப்-4 தேர்வு மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீ சார் விசாரணைக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சி.பி. சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்சேட், ஐ.ஜி. சங்கர் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் சூப்பிரண்டுகள் ரங்கராஜன், மல்லிகா, மாட சாமி, விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனரக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய ரமேஷ்(39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றிய திருக்குமரன்(35), முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியை சேர்ந்த நிதீஷ் குமார்(21) ஆகிய 3 பேர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முறைகேடு புகாரில் சிக்கிய தேர்வு மையத்தில் தேர்வு அதிகாரிகளாக செயல்பட்ட கீழக்கரை, ராமேசுவரம் தாசில்தார்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் நிரபராதிகள் என்று தெரிய வந்ததால் அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னை ஆவடியைச் சேர்ந்தது. வெங்கட்ராமன்(38) என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு தேர்வர்களிடம் தலா ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று மோசடியை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கோடனூர் கிராமத்தை சேர்ந்த மா.திருவேல்முருகன்(31), கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா சிறுகிராமத்தை சேர்ந்த ஆர்.ராஜசேகர்(26), ஆவடி கவுரிப்பேட்டையைச் சேர்ந்த மு.காலேஷா(29) ஆகிய 3 பேர் இடைத்தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குறுக்கு வழியில் அதிக மதிப்பெண்கள் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேசுவரம் ஆகிய தேர்வு மையங்களில் எழுதப்பட்ட விடைத்தாள்களை வேன் மூலம் சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு எடுத்து வந்துள்ளனர். வழியில் வேனை நிறுத்தி குறிப்பிட்ட 99 தேர்வர்களின் விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து அதில் திருத்தம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்யும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம் காந்தன்(45) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடைய வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையில் அவரது 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த செல்போன்கள் வாயிலாக இடைத்தரகர்களுடன் பேசி ஓம் காந்தன் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இடைத்தரகராக செயல்பட்ட தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால சுந்தர்ராஜ் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். இதையொட்டி இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கைதான ஓம் காந்தனும், பால சுந்தர்ராஜும் சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முறைகேடாக தேர்வான 99 பேரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் நேரடியாக இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்து லட்சக்கணக்கில் பணத்தை வாரி வழங்கிய 50 பேர் வரை கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story