குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது


குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2020 2:03 AM GMT (Updated: 28 Jan 2020 2:03 AM GMT)

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது.

விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர் கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், முறைகேடு செய்து சேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவரை செல்போன் சிக்னல் மூலம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் சிபிசிஐடி போலீசார்  அதிரடியாக பிடித்தனர்

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ராஜசேகர், சீனுவாசன் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story